யாழில் அதிகரித்து வரும் இணைய மோசடிகள்; பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள பொலிஸார்
தற்போதைய தொழிநுட்ப உலகில் இணையம் (online) ஊடான நிதி மோசடிகள் அதிகளவில் பதிவாகிவருகின்றன.
அந்த வகையில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவை சேர்ந்த இருவர் 30 இலட்சம் மற்றும் 16 இலட்ச ரூபாவை இழந்த நிலையில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது குறித்த மேலதிக விசாரணையின் போது,
இணையம் ஊடாக அதிக பணம் ஈட்ட முடியும் என ஆசை வார்த்தைகளுடனான சமூக வலைத்தளங்கள் ஊடாக மோசடிக்காரர்கள் விளம்பரம் செய்கின்றனர்.
அதனை நம்பி அந்த இணைப்பின் ஊடாக உட்செல்வோருக்கு முதலில் சிறு தொகை பணத்தினை அவர்கள் சொல்லும் கணக்குக்கு இணையம் (online) ஊடாக பணத்தினை செலுத்த சொல்லுவார்கள்.
முதலில் சிறு தொகை பணத்தினை செலுத்த சொல்வதனால் , இவர்கள் எதுவும் யோசிக்காமல் பணத்தினை செலுத்தி விடுவார்கள்.
பணம் செலுத்தப்பட்டதும், அதொரு முதலீடு எனவும், அதனால் வந்த வருமானம் என ஒரு தொகையை இவர்களுக்கு வைப்பு செய்து ஆசையை மேலும் தூண்டுவார்கள்.
இவ்வாறாக பெரும் தொகை பணத்தினை வைப்பிலிட்டதன் பின்னர், அந்த பணத்துடன் அவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.
அதன் பின்னரே தாம் ஏமாற்றப்பட்ட விடயம் இவர்களுக்கு தெரியவரும்.
ஏமாற்றப்பட்ட விடயம் அறிந்த பின்னர் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்வார்கள்.
அதில் யாருக்கு எதிராக முறைப்பாடு செய்வது , அவர்களின் விபரங்கள் என எதுவும் இருக்காது.
அதனால் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதில் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
எனவே இவ்வாறான இணைய மோசடியாளர்களிடம் சிக்காது மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்தனர்.