யாழில் அடாவடித்தனம் செய்த இளைஞனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரைத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் குறித்த சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடுமையான குற்றச் செயல்கள்
கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கடந்த 08 ஆம் திகதி கொக்குவில் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பிலேயே சந்தேகநபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது, கைக்குண்டு ஒன்றை தமது வீட்டு வளாகத்தில் புதைத்து வைத்துள்ளதாகக் கூறியுள்ளார்.
அதற்கமைய, கோண்டாவில் பகுதியிலுள்ள சந்தேகநபரின் வீட்டு வளாகத்திலிருந்து கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்குப் பயன்படுத்தக்கூடிய பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து , யாழ்ப்பாணம் பெருங்குற்றத்தடுப்பு பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.