வாங்கியதை கொடுங்கள்; கோட்டை பொலிஸாருக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!
ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பணத்தை உடனடியாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்த போது அந்தப் பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து, இன்று கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, பணத்தை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிக்கு உத்தரவிட்டார்.
கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணத்தை கோட்டை பொலிஸாரிடம் கையளித்ததாக கோட்டை பொலிஸார் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் பணம் கையளிக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்துள்ள போதிலும் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய நீதவான், பணத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.