இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டம் ; பிரதேச செயலாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இலங்கையின் முதல் கேபிள் கார் திட்டத்தின் நடவடிக்கைகளில் அநாவசியமாகத் தலையிடுவதையோ அல்லது இடையூறு செய்வதையோ தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (07) கம்பளை பிரதேச செயலாளருக்கு எதிராக ரிட் கட்டளை ஒன்றைப் பிறப்பித்தது.
இதற்கு மேலதிகமாக, கம்பளை பிரதேச செயலாளர் ஒரு இலட்சம் ரூபாய் நீதிமன்றச் செலவை மனுதாரருக்குச் செலுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் இராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்று தாக்கல் செய்த ரிட் மனுவின் தீர்ப்பை வழங்கிய போதே, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
மனுதாரர் நிறுவனம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமது மனுவைச் சமர்ப்பித்து, அம்புலுவாவ பிரதேசத்தில் கேபிள் கார் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து அரச நிறுவனங்களும் ஒப்புதல் அளித்துள்ள போதிலும், கம்பளை பிரதேச செயலாளர் அதன் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் குறிப்பிட்டிருந்தது.
வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விடயங்களில், குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதி முழுமையாக நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும், அதில் தலையிட கம்பளை பிரதேச செயலாளருக்கு அதிகாரம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
பதில் மனுதாரரான பிரதேச செயலாளர் ஏற்படுத்திய இடையூறுகள் காரணமாக குறித்த திட்டத்தை உரிய நேரத்தில் முடித்துக்கொள்ள முடியவில்லை என்றும், எனவே, பிரதேச செயலாளர் இந்த செயற்பாடுகளில் அநாவசியமாகத் தலையிடுவதையும், இடையூறு செய்வதையும் தடுக்கும் ஆணை ஒன்றைப் பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.