இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்தியர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 25 பேர் மல்லாகம் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ள அதேவேளை, மேலும் 12 பேருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 25 இந்திய மீனவர்கள், யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வழக்கு விசாரணை
இவர்கள் மீதான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது.
நேற்று (31) இவ்வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, குறித்த 25 மீனவர்களுக்கும் எதிராகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாத காரணத்தினால், அவர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி கைது செய்யப்பட்ட 12 இந்திய மீனவர்கள் தொடர்பான வழக்கு நேற்று (31) ஊர்காவற்றுறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குறித்த மீனவர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.