லக்ஷ்மன் யாப்பாவுக்கு எதிரான வழக்கு ; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (22) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் அழைக்கப்பட்டது. இதன்போது, முறைப்பாட்டுத் தரப்பு சாட்சிகளிடமிருந்து சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

வழக்கின் விசாரணை
அதனைத் தொடர்ந்து, வழக்கின் மேலதிக விசாரணைகளை ஜூலை மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பு விழாவை முன்னிட்டு, 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் திகதி இலங்கை முதலீட்டுச் சபையின் நிதியிலிருந்து 11 பத்திரிகைகளில் துணை வெளியீடுகளைப் பிரசுரித்ததன் ஊடாக அரசாங்கத்திற்கு 1,748,877.76 ரூபா நட்டமேற்படுத்தியமை மூலம் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகக் கூறி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இருவருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.