சஹ்ரான் மனைவி தொடர்பில் நீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவு!
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொஹமட் சஹ்ரான் ஹாஷிமின் மனைவியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளதுடன் அனைத்து வழக்குகளும் கல்முனை நீதிமன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹாஷிமின் மனைவி பாதிமா ஹாதியா தொடர்பான வழக்கு இன்றைய தினம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது பாதிமா ஹாதியாவினை எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கும் உத்தரவினை நீதிபதி வழங்கினார்.
அத்துடன் கல்முனை நீதிமன்றில் இது தொடர்பான வழக்கினை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதேவேளை வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை பெப்ரவரி 21ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 29-11-2018 அன்று வவுணதீவு வலையிறவு காவலரணில் கடமையிலிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
குறித்ட்த படுகொலை தொடர்பில் 2019 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதியன்று தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தற்கொலைதாரி சஹ்ரான் ஹாஷிமினின் முக்கிய சகாக்களான சஹ்ரானின் சாரதியான முஹமது சரீப் ஆதம்பாலெப்பை கபூர் (வயது 54), கம்சா முகைதீன் இம்ரான் (வயது 31) முஹமது ஆசிம் சியாம் (வயது 34) உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை எதிர்வரும் பெப்ரவரி 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.