கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் மீண்டும் அறிவித்தல்!
அரசியல்வாதிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவின் ஒரு பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெயரிடப்பட்டுள்ளளார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிவித்தல் அனுப்புமாறு உயர்நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் நட்டஈடு
2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி 'அரகலய' போராட்டக்களத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் ஏற்பட்ட வன்முறைகளின் போது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட அல்லது சேதமடைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சட்டவிரோதமான முறையில் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கப்பட்ட நிதியை மீள அறவிடுமாறும், குறித்த நட்டஈடு வழங்கப்பட்டமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறும் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு புதிய அறிவித்தலை அனுப்புமாறு உயர்நீதிமன்றம் மனுதாரர் தரப்பிற்கு கட்டளையிட்டது.