நாட்டின் பணவீக்கம் மும்மடங்காகும்; மக்கள் யாசகர்களாக மாறுவார்கள் ;பேராசிரியர் எச்சரிக்கை!
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியின் விலை சுமார் 50% வரை அதிகரிக்கலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஆனந்த விஜேவிக்ரம எச்சரித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் உள்ளூர் அரிசியின் விலையும் அதற்கேற்ப அதிகரித்து கிலோ ஒன்றின் விலை 300 ரூபாவை நெருங்கலாம் எனவும் அவர்கூறினார்.
அத்துடன் சீனி, பால் மா, மரக்கறிகள், எரிவாயு, எரிபொருள், பாண், பணிஸ், ஆடைகள், புத்தகங்கள், சப்பாத்துகள், செருப்புகள் போன்றவற்றின் விலை 35% முதல் 70% வரை அதிகரிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள், கார்கள், சிமெந்து, டைல்ஸ் மற்றும் மின்சாதனங்களின் விலைகளும் கட்டுப்பாடின்றி உயரும் எனவும் அவர் கூறினார்.
இந்த நிலைமைகள் நாட்டில் பணவீக்கத்தை மூன்று மடங்காக உயர்த்தும் என்றும், ஏழைகள் தவிர்க்க முடியாமல் படுகுழியில் விழுந்து யாசகர்களாக மாறுவார்கள் என்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.