சிறுவர்களுக்கு அதிகளவு கொரோனா பரவ வாய்ப்புள்ளது - தீபால் பெரேரா
சிறுவர்களுக்கு கொரோனா தொற்று அதிகளவில் பரவக் கூடிய நிலைமை காணப்படுவதாக சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தில் 30 சிறுவர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர் என்றும் நேற்றைய தினம் முடிவடைந்த வாரத்தில் 80 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளமையால் கொரோனா தொற்று அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்கள் குணமடைந்த பின்னர் பல்வேறு நோய்க்குள்ளாக வாய்ப்புள்ளதால் பெற்றோர்கள் சிறுவர்களைத் தொற்றிலிருந்து பாதுகாக்கத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்த நாட்களில் டெல்டா கொரோனா வைரஸ் அதிகளவில் பதிவாகி வருவதாகவும், சிறுவர்களுக்கு டெல்டா கொரோனா வைரஸ் அதிகளவில் பரவக் கூடுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இதனால் முடிந்தவரை பெற்றோர் தங்கள் பிள்ளைகள் இந்த நாட்களில் சமுதாயத்தில் சுற்றித் திரியாமலை் பார்த்துக் கொள்ள வேண்டும் என சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்