யாழில் சமுர்த்தி வங்கி ஊழியருக்கு கொரோனா; சென்றுவந்தவர்களை அடையாளப்படுத்துமாறு கோரிக்கை
யாழ்.தென்மராட்சி - வரணியில் உள்ள சமுர்த்தி வங்கியில் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வங்கிக்கு சென்றவர்களை பொறுப்பான சுகாதாரப் பரிசோதகரிடம் தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .
எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் வரணி சமுர்த்தி வங்கியில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு கடந்த 28ஆம் திகதி தொற்று உறுதியாகியுள்ளதையடுத்து வங்கி 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது .
அத்துடன் அங்கு கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் மற்றும் நெருக்கமாக பழகியவர்கள் உட்பட இதுவரை 33க்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் எதிர்வரும் 10ஆம் திகதி வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 20ஆம் திகதிக்கு பின்னர் சமுர்த்தி வங்கிக்கு சென்றவர்கள் மற்றும் நெருக்கமாக பழகியவர்கள் வரணிக்கு பொறுப்பான சுகாதாரப் பரிசோதகரிடம் தெரிவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஊழியரின் தொடர்பை பேணியவர்கள் எதிர்வரும் 10ஆம் திகதி வரணிப் பகுதியில் மேற்கொள்ளப்படவிருக்கும் பிசிஆர் பரிசோதனையில் பங்கு கொண்டு தமது குடும்பத்தையும்,சமுதாயத்தையும் பாதுகாத்து தொற்று சமூகத்தில் பரவுவதை தடுப்பதற்கு மக்கள் முன்வரவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா சந்தேகம் உள்ளவர்கள் 10ஆம் திகதி பிசிஆர் எடுக்க முன்வருமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.