கொழும்பில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள்
ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தத் தீ விபத்து சம்பவங்களில் மொத்த மீட்பு நடவடிக்கைகளின் எண்ணிக்கை 17 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தீ விபத்து சம்பவங்கள்
கடந்த ஆண்டில் மட்டும் கொழும்பு மாவட்டத்தில் 382 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றில் 46 மீட்புச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
எவ்வாறாயினும், இந்த ஆண்டின் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் கொழும்பு மாவட்டத்தில் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒரு விடயமாகும் என்றும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இந்த ஆண்டில் இதுவரை தீயணைப்பு சேவைத் திணைக்களத்திற்கு 13 அவசர அழைப்புகள் கிடைத்துள்ளதுடன், அந்த அழைப்புகளில் பாதை தடைகள், மரங்கள் முறிந்து விழுதல், வீதி விபத்துக்கள் காரணமாக இடம்பெறும் மீட்பு நடவடிக்கைகளும் அடங்குகின்றன.
இந்தத் தீ விபத்துகளுக்கான முக்கிய காரணங்களாகப் பல்வேறு பணி இடங்களில் தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதிருத்தல், அவசரப் பதிலளிப்பு நடவடிக்கைகளுடன் இணையாதிருத்தல், வீடுகள் மற்றும் பணி இடங்களில் பாதுகாப்பற்ற மின்சாரப் பயன்பாடுகள் மற்றும் வறண்ட வானிலை நிலைமைகள் என்பன செல்வாக்கு செலுத்தியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.