டீசலை திருடிய சிபெட்கோ ஊழியர்கள்!
அம்பாறை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பவுசரில் கொண்டு சென்று எரிபொருளை திருடிய இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் சாரதியும் அதன் உதவியாளரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
9 இலச்சத்து 43 ஆயிரத்து 800 ரூபா பெறுமதியான 3300 லீற்றர் டீசலை வழங்காது மோசடி செய்து விற்பனை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
3300 லீற்றர் டீசல் மோசடி
சந்தேக நபர்களை எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (28) உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு பெற்றோலியம் கூட்டுத்தாபனத்தில் எரிபொருள் பவுசரில் சாரதியாகவும் அதன் உதவியாளராக கடமையாற்றிய இருவரும் சம்பவதினமான நேற்று முன்தினம் (27) அம்பாறை நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளை பவுசரில் எடுத்து சென்றுள்ளனர்.
அங்கு பெற்றோலை அங்குள்ள நிலத்திலுள்ள தாங்கியில் நிரப்பிவிட்டு டீசல் தாங்கியில் சிறியளவு டீசலை வழங்கிவிட்டு முழு டீசலும் பவுசரில் இருந்து இறக்கி விட்டதாக தெரிவித்து 3300 லீற்றர் டீசலை மோசடி செய்து கொண்டு கொண்டு சென்றுள்ளனர்.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராவில் டீசலை அங்கு இறக்காது கொண்டு செல்வதை கண்டு உடனடியாக மட்டக்களப்பிலுள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனத்துக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அவர்கள் பவுசர் எங்கிருக்கின்றது என ஜிபிஎஸ் மூலம் சோதனையிட்ட போது கல்லடி பகுதியில் பவுஸர் இருப்பதை கண்டிறிந்தனர்.
அது தொடர்பில் பொலிசாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து சட்டவிரோதமாக டீசலை விற்பனை செய்வதற்காக பவுசரில் இருந்து டீசலை எடுத்து கலன்களில் நிரப்பிக் கொண்டிருந்த நிலையில், பவுசரின் சாரதி மற்றும் உதவியாளரையும் பொலிசார் கைது செய்ததுடன், டீசலுடன் கலன்களையும் மீட்டனர்.
கைது செய்யப்பட்ட கிரான்குளம் மற்றும் கல்லடியைச் சேர்ந்த இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தியதையடுத்து இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.