பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் இரவு நேரங்களில் சோதனை!
இலங்கையில் உள்ள பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் இரவு நேரங்களில் சோதனைகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாணவர்கள் தங்கும் விடுதிகளில் பெரும்பாலும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பகிடிவதை சம்பவங்கள் இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பல்கலைக்கழக விடுதிகளில் பதிவாகும் பகிடிவதைகளை தடுக்கும் வகையில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
விடுதிகளை சோதனையிடும் பணிகளில் பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாணவர் ஆலோசகர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி மற்றும் வாகனங்கள் வழங்கப்படும் எனவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.