ரம்புக்வெல்லவின் மகனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இன்று (11) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (11) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

உரிய வகையில் வெளிப்படுத்தத் தவறியமை
இதன்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பிரதிவாதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிரதிவாதியை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.
பிரதிவாதியின் கைரேகைகளைப் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட செயலாளராக கடமையாற்றியுள்ள பிரதிவாதிக்கு எதிராக, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதிக்கும் 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ரூபாய் 296,566,444.76 பெறுமதியான சொத்துக்கள் மற்றும் உடைமைகளை ஈட்டியுள்ள அவர், அவற்றில் ரூபாய் 275,302,616.06 பெறுமதியான பணம் மற்றும் சொத்துக்களை ஈட்டிய விதத்தை உரிய வகையில் வெளிப்படுத்தத் தவறியமை தொடர்பில் அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.