மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கைவிடப்பட்ட யாழ் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை கைத்தொழில் பேட்டையாக உருவாக்குவது தொடர்பில் பிரதி அமைச்சர் குழாம் கள விஜயம் மேற்கொண்டது.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை உள்நாட்டு யுத்தம் காரணமாக சுமார் 36 வருடங்களுக்கு மேலாக கைவிடப்பட்டுள்ளது.

பாரிய கைத்தொழில் பேட்டை
இந்த நிலையில் , சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான சுமார் 400 ஏக்கர் காணியில் பாரிய கைத்தொழில் பேட்டையை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்திற்காக முதல் கட்டமாக காணியினை முதலீட்டு சபைக்கு கையளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதன் ஊடாக எதிர்காலத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்பேட்டை உருவாக்கப்படும் பட்சத்தில் எதிர்காலத்தில் வடமாகாணத்தில் பாரிய வேலைவாய்ப்புக்கள் உருவாகும் என்பதுடன் , நாட்டின் பொருளாதாரத்திலும் பாரிய முன்னேற்றத்தினை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியினை நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தலைமையில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி , க.இளங்குமரன் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.