சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கடந்த சில தினங்களாக அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தங்கம் 2.36 சதவீதத்தாலும், வெள்ளி 4.52 சதவீதத்தாலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தத் திடீர் சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ; கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இரு பெண்கள் ; புதிய சந்தேகங்கள்
அமெரிக்க டொலரின் மதிப்பு உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ளதால், ஏனைய நாணயங்களை வைத்திருப்பவர்களுக்குத் தங்கம் வாங்குவது அதிக செலவீனத்தை ஏற்படுத்துகிறது.
இது தங்கத்திற்கான தேவையைக் குறைத்துள்ளது. மத்திய கிழக்கிற்கு அமெரிக்கா கூடுதல் படைகளை அனுப்புவது எண்ணெய் விலை உயர்வு மற்றும் பணவீக்க அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் வட்டி வீதங்கள் மேலும் அதிகரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு தங்கம் மற்றும் வெள்ளியின் ஈர்ப்பைக் குறைத்துள்ளது.

கடந்த காலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உச்சத்திலிருந்தபோது வாங்கிய முதலீட்டாளர்கள், தற்போது தமது பங்குகளை விற்று இலாபத்தை ஈட்டி வருவதால் சந்தையில் விற்பனை அழுத்தம் அதிகரித்துள்ளது.
சந்தைப் பகுப்பாய்வாளர்களின் கருத்துப்படி, விலைகள் மேலும் வீழ்ச்சியடையுமா அல்லது உயருமா என்பது பின்வரும் நிலைகளைப் பொறுத்தது.
தங்கத்தின் விலை $4,494 என்ற நிலைக்குக் கீழ் சென்றால், குறுகிய காலத்தில் மேலும் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. வெள்ளியின் விலை $68 என்ற எல்லைக்குக் கீழ் இறங்கினால், மேலதிக விற்பனை அழுத்தம் உருவாகலாம்.
குறுகிய கால சரிவுகள் இருந்தபோதிலும், உலகளாவிய பணவீக்க அபாயங்கள் மற்றும் மத்திய வங்கிகளின் தங்கக் கொள்வனவு காரணமாக நீண்ட காலத்தில் தங்கம் மற்றும் வெள்ளி மீண்டும் விலையேற்றத்தைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி வீதங்கள் குறைக்கப்படும் பட்சத்தில் உலோகங்களின் விலை மீண்டும் உச்சத்தைத் தொடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.