வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட பிரதம காசாளர் ; சிக்கியது எப்படி?
இலங்கையின் பிரதான அரச வங்கிக் கிளையொன்றின் பிரதம காசாளர் ஒருவர், பாரியளவு வங்கிப் பணத்தை வட்டிக்கு விட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரச வங்கியொன்றின் கடுவலை கிளையில் பணியாற்றும் பிரதான காசாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியில் இருந்த 13.5 கோடி ரூபாவிற்கு மேற்பட்ட தொகையை தவறான வகையில் பல்வேறு கணக்குகளில் இந்த நபர் வைப்புச் செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
30 வயதான நபர் - பத்தாண்டுகள் சேவை அனுபவம்
சம்பவத்தில் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 30 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்பதுடன் குறித்த நபர் வங்கியில் பத்தாண்டுகள் சேவை அனுபவம் உடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
நாளாந்த பணம் சரிபார்ப்பு செய்யும் வேளையில் பெரிய அளவில் பணம் குறைவடைந்திருந்ததனை அவதானித்த வங்கி முகாமையாளர் இது குறித்து கடுவல பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதன் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் அவரிடமிருந்து பணம் வைப்புச் செய்யப்பட்ட பல ரசீதுகளையும் மீட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.