கனடாவில் இலங்கை குடும்பம் படுகொலை: தனுஷ்க விக்கிரமசிங்க வெளியிட்ட முதல் அறிக்கை!
கனடா தலைநகர் ஒட்டாவாவில் அண்மையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தில் தனது குடும்பம் மற்றும் நண்பரை இழந்து தவிப்பதாக தாக்குதலில் படுகாயமடைந்த இலங்கையர் தனுஷ்க விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலின் பின்னர் முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனுஷ்க விக்கிரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவித்திருந்தாவது,
இந்த சோகம் என்னையும் என் குடும்பத்தையும் ஆழமாக உலுக்கியது. எனது அன்பு மனைவி தர்ஷினி மற்றும் எனது அழகான குழந்தைகள் இனுகா, ரணயா, அஷ்வினி மற்றும் கெல்லி மற்றும் எனது நண்பர் காமினி ஆகியோரை மார்ச் 6 ஆம் திகதி இழந்ததால் நான் பேரழிவிற்கு ஆளாகியுள்ளேன்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இறுதிச் சடங்கின் போது, தனது குடும்பத்தின் இழப்பில் இருந்து மீள தனிப்பட்ட நேரம் தேவை என்று கூறினார்.
"இந்த நேரத்தில் நான் எந்த நேர்காணலையும் வழங்க மாட்டேன், மேலும் எனது தனியுரிமை ஊடகங்கள் தொடர்ந்து மதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." என்றார்.
குறித்த நேரத்தில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றிகளை” தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஒட்டாவாவின் வரலாற்றில் மிக மோசமான படுகொலை சம்பவத்தில் கொல்லப்பட்ட இலங்கைக் குடும்பத்தினரின் இறுதிச் சடங்கில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
தனுஷ்க விக்கிரமசிங்கவின் குடும்பத்தினர் கனடாவிற்கு புதிதாக வந்தவர்களாவர். இச்சம்பவத்தில் 6 வதாக கொல்லப்பட்ட நபர் விக்கிரமசிங்கவின் மிக நெருங்கிய நண்பராவார்.
தாக்குதல் நடந்த நாளில் 19 வயதுடைய இலங்கை இளைஞரைக் கைது செய்த பொலிஸார், அவர் மீது 6 முதல் தரக் கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர்.
சந்தேகநபரான இலங்கையை சேர்ந்த 19 வயதான பெப்ரியோ டி-சொய்சா ஒரு சர்வதேச மாணவர் எனவும் அவர் கொலைசெய்யப்பட்ட குடும்பத்துடன் வாழ்ந்து வந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.