இந்த பானங்கள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்துமா?
சர்க்கரை நோய் வந்துவிட்டாலே உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டியது அவசியமான ஒன்று இரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த நோயாளிகள் பலரும் தங்களுக்கான உணவு பட்டியலை வடிவமைத்து விடுவார்கள்.
பொதுவாக மருத்துவர்கள் நீரிழிவு நோயாளிகளை அதிக கலோரி அல்லது இனிப்பு நிறைந்த பானங்களைத் தவிர்க்கும்படி அறிவுறுத்துகின்றனர்.
அதிகப்படியான கலோரி நிறைந்த உணவுகளை சாப்பிடுவதாலும் அதிகப்படியான இனிப்பு சுவையுள்ள உணவையோ அல்லது பானத்தையோ பருகுவதால் ரத்த சர்க்கரையின் அளவு அதிகரித்து உடலுக்கு பலவிதமான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாகவும், புத்துணர்வாகவும் வைத்திருக்க பலரும் பலவித பானங்களை விரும்பி குடிக்கின்றனர்.
ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு கோடை காலத்தில் இதுபோன்ற பானங்களை குடிப்பது சிரமாகிவிடுகிறது.
இந்த பானங்களில் பெரும்பாலும் சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற சில கலவைகள் சேர்க்கப்பட்டதாக இருக்கிறது இதனை குடிக்கும்போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென்று அதிகரிக்கும்.
அதேமயம் இந்த கோடையின் வெப்பத்தைத் தணிக்க, நீரிழிவு நோயாளிகளுக்கு சரியான மாற்றுகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம்.
இப்போது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான பானங்களை பற்றி பார்ப்போம்.
தண்ணீர்
பொதுவாக தண்ணீர் அமிர்தமாக கருதப்படுகிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரின் மூலம் அதிகப்படியான குளுக்கோஸை வெளியேற்றி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
எனவே உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும் மற்ற உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்கவும் நீங்கள் போதுமான அளவு தண்ணீரை குடிப்பது நல்லது மற்றும் போதுமான அளவு தண்ணீர் இரத்த சர்க்கரை அளவை பாதிக்காது.
எலுமிச்சை சாறு
கோடைகாலத்தில் எலுமிச்சைப்பழத்தின் பங்கு இன்றியமையாதது பலரும் இந்த வெப்பமான நேரத்தில் எலுமிச்சை சாறு குடிப்பதையே பெரிதும் விரும்புகின்றனர்.
நீரிழிவு நோயாளியாக இருப்பவர்கள் எலுமிச்சை சாறில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்துவிடுவது நல்லது, பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு எலுமிச்சை சாறு நல்லது.
காய்கறி சாறு
பொதுவாக பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை இருக்கும் என்பதால் பழச்சாறுகளிலும் அதிக அளவு இயற்கை சர்க்கரை இருக்கும்.
எனவே பழச்சாறுகளுக்கு பதிலாக காய்கறி சாறை குடிக்கலாம். உங்களுக்கு எந்தெந்த காய்கறிகள் பிடிக்குமோ அதையெல்லாம் கலவையாக சேர்த்து சாறு தயாரித்து குடிக்கலாம்.
இந்த காய்கறி சாறில் உப்பு அல்லது சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.
இளநீர்
மிகவும் சத்தான தேங்காய் தண்ணீரை குடிப்பதால் உடல் நீரேற்றமாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட இந்த நீரில் இயற்கையிலேயே சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கிறது.
தேங்காய் நீரில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்களும் உள்ளது என்பதால் நீரிழிவு நோயாளிகள் தேங்காய்த் தண்ணீரைக் குடிக்கலாம்.
இருப்பினும் நீரிழிவு நோயாளிகள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி சரியான அளவில் தேங்காய் நீரை குடிப்பது சிறந்தது.
மோர்
மோர் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்ட சூப்பரான பானமாக கருதப்படுகிறது, இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு சிறந்த புரோபயாடிக் ஆகும்.
மோர் குடிப்பதால் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு குறையும். அத்தோடு மோர் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ், குறைந்த கொழுப்புச் சத்து மற்றும் குறைவான கலோரிகளைக் கொண்டிருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கும் இது ஒரு சிறந்த பானமாக கருதப்படுகிறது.