நாளாந்தம் ஐந்து இலட்சம் வருமானம் பெற்று தரும் கலிப்சோ தொடருந்து
இலங்கையின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ள கலிப்சோ தொடருந்து , கடந்த 17 ஆம் திகதி மாத்திரம் 1 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த கலிப்சோ தொடருந்து சேவை இசை நிகழ்வுகள் மற்றும் உணவக வசதியைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கலிப்சோ தொடருந்து
பண்டாரவளையில் இருந்து பதுளை நோக்கி நாளாந்தம் பயணிக்கும் கலிப்சோ தொடருந்து நாளாந்தம் சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுவதாகவும், கலிப்சோ தொடருந்துக்காக ஒரு நாளைக்கு சுமார் நான்கு இலட்சம் ரூபாய் செலவாகியுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது, நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளுக்கு இயற்கை காட்சிகளைக் காண வாய்ப்பளிக்கும் வகையில், தெம்மோதர அருகே 10 நிமிடங்களும், எல்ல 9 வளைவுப் பாலத்தில் 10 நிமிடங்களும் ரயில் நிறுத்தப்படும் என்று தொடருந்து திணைக்கள முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டுவதோடு சிறந்த சேவையையும் வழங்க தொடருந்து திணைக்களம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் தொடருந்து திணைக்கள பொது முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.