அஸ்வெசும திட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி
இலங்கை மக்களுக்கு வழங்க்கப்படும் அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டத்தைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று (18) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்தார்.
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்
அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டம் 2023.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அமுல்படுத்தப்படுவதுடன், 2415/66 மற்றும் 2024.12.21 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இத்திட்டம் இறுதியாகத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் தற்போது நடைமுறையிலுள்ள அஸ்வெசும உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற கொடுப்பனவுகள் கீழ்வருமாறு திருத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடுவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் உதவி வழங்கும் திட்டத்தின் I ஆவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்டுள்ள 'நிலையற்றவர்கள்' சமூகப் பிரிவினருக்கான உதவித்தொகை கிடைக்கின்ற காலப்பகுதியை 2025.04.30 வரை நீடித்தல்.
குறித்த உதவி வழங்கும் திட்டத்தின் II ஆவது அட்டவணையின் உள்ளடக்கப்பட்டுள்ள இயலாமைக்குட்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவுதொகை மற்றும் சிறுநீரக நோய்க்கான உதவி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவுதொகையை 7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபா வரை அதிகரித்தல்
மற்றும் முதியோருக்காக வழங்கப்படும் உதவுதொகையை 3,000 ரூபாவிலிருந்து 5,000 ரூபா வரை அதிகரித்தல் மற்றும் குறித்த தீர்மானங்களை 2025 ஏப்ரல் மாதம் தொடக்கம் நடைமுறைப்படுத்தல்.
II ஆவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள உதவுதொகையைப் பெறுகின்ற இயலாமைக்குட்பட்ட நபர்களுக்கான கொடுப்பனவு, சிறுநீரக கொடுப்பனவு மற்றும் முதியோருக்கான கொடுப்பனவு நோயாளர்களுக்கான மேற்குறிப்பிட்டுள்ள முன்மொழிவுகளுக்கமைய, கொடுப்பனவுக் காலப்பகுதியை 2025.12.31 வரை நீடித்தல்.
2025 ஏப்ரல் மாதத்தின் பின்னர் நிலையற்றவர்கள் சமூகப் பிரிவினருக்கான கொடுப்பனவு நிறுத்தப்பட்டாலும், குறித்த குடும்பங்களிலுள்ள இயலாமைக்குட்பட்ட நபர்கள், சிறுநீரக நோயாளர்கள் மற்றும் முதியோருக்கு வழங்கப்படும் நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுக்கான காலப்பகுதியை 2025.12.31 வரை நீடித்தல்.
புதிதாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இயலாமைக்குட்பட்ட நபர்கள், சிறுநீரக நோயாளர்களின் விண்ணப்பங்கள் உயர்ந்தபட்ச வரையறையின் கீழ், உள்வாங்கி தகுதி பெறுகின்றவர்களுக்கு குறித்த கொடுப்பனவை 2025.12.31 வரை வழங்கல்.