யாழ், கிளிநொச்சி பதில் அரச அதிபர்களிற்கு அமைச்சரவை அனுமதி; தொழிற்சங்கம் போர்க்கொடி
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட கடமை நிறைவேற்று அரச அதிபர்கள் நேற்று முதல் பதில் அரச அதிபராக பணியாற்ற அமைச்சரவை அனுமதி வழங்கிய நிலையில் தொழிற்சங்கம் போர்க்கொடி தூக்கவுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ம.பிரதீபனும் கிளிநொச்சி மாவட்டத்திற்கு எஸ்.முரளிதரன் ஆகியோர் நிர்வாக சேவை தரம் 1ஐ சேர்ந்த உத்தியோகத்தர்கள் தற்போது கடமை நிறைவேற்று அரச அதிபராக பணியாற்றும் நிலையில் பதில் அரச அதிபராக நியமிப்பதற்கான அனுமதி நேற்று முன்தினம் அமைச்சரவை வழங்கியுள்ளது.
அமைச்சர் அலி சப்ரி கடும் எதிர்ப்பு
இவ்வாறு வழங்கிய அனுமதிக்கான நிகழ்ச்சி நிரல் மிக இரகசியமாக நகர்த்தப்பட்டபோதும் அமைச்சர் அலி சப்ரி மிக கடுமையாக எதிர்த்தபோதும் வடக்கின் அமைச்சரவை அமைச்சரின் விடா முயற்சினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வழங்கிய தவறான அனுமதி தொடர்பில் விரைவில் ஜனாதிபதியுடன் இடம்பெறும் நிர்வாக சேவை ஊழியர் சங்க சந்திப்பில் பிரஸ்தாபிக்கப்பட்டு தீர்வு எட்ட முயற்சிக்கப்படும்.
அதற்கு தீர்வு கிட்டாத நிலையில் மாற்று வழி தொடர்பில் ஆராயப்படும் என நிர்வாக சேவை தொரிற்சங்கத்தின் வடக்கு மாகாண மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.