முல்லைத்தீவில் சிக்கிய ஒருதொகை தோட்டாக்கள்; விடுதலைப்புலிகளுடையதா?
முல்லைத்தீவு பகுதியில் T56 ரக துப்பாக்கிக்குரிய தோட்டாக்கள் 401ஐ தம் வசம் வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
புதுமாத்தளன் பகுதியில் உள்ள வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தோட்டாக்களே இவ்வாறு மீட்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் முள்ளிவாய்க்கால் பகுதியில் வசிக்கும் 40 வயதானவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக முல்லைத்தீவு குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சந்தேகநபரின் வீட்டிலிருந்து தோட்டாக்கள், மற்றும் மூன்று கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
அதேநேரம் கைதான சந்தேக நபர் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை குறித்த தோட்டாக்கள் கடந்த யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், அவற்றை மறைத்து வைத்திருந்த நோக்கம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.