விடுதியிலிருந்த தம்பதியிடம் இலஞ்சம்; பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் !
யுக்திய நடவடிக்கைக்கையில் , விடுதியொன்றிலிருந்த தம்பதியரிடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டுப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் .
கொட்டாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் விசேட கடமைகளில் ஈடுபட்டிருந்த பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருமே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பணி இடைநீக்கம்
பிலியந்தலை சுவரபொல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் உள்ள தம்பதியினர் ஐஸ் போதைப்பொருள் வைத்திருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து இருவரும் விடுதிக்கு சோதனைக்காக சென்றுள்ளனர்.
இதன்போது, இந்த இருவரும் அந்த தம்பதியர்களிடம் மூன்று இலட்சம் ரூபா இலஞ்சம் கோரியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து தம்பதியினர் முதலில் 70,000 ரூபா பணத்தை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொடுத்து மீகுதி 230,000 ரூபா பணத்தை கொடுப்பதற்காகக் கொட்டாவ சென்ற போது இருவரும் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.