தாய்க்கு பயந்து குளத்தில் பாய்ந்த சிறுவர்கள்; நேர்ந்த சோகம்
பிபிலை- மெதகம பெல்லன்ஓயாவுக்கு அருகில், மீன் வளர்ப்புக்காக அமைக்கப்பட்டிருந்த குளமொன்றில் விழுந்து 7 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்த சிறுவன் தனது 4 மற்றும் 11 வயதுடைய சகோதரர்களுடன், நேற்று மாலை 3.30 மணியளவில் பெல்லன்ஓயாவுக்கு நீராடச் சென்றுள்ளார்.
இதன்போது அதற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மீன் வளர்ப்புக்கான குளத்தைப் பார்த்துக்கொண்டிருந்த நிலையில் , அங்கு வந்த தாயார் பிள்ளைக் கண்டு சத்தம் போட்டுள்ளார்.
தாய்க்கு பயந்து பிள்ளைகள் மூவரும் குளத்துக்குள் பாய்ந்துள்ளனர். குளத்தில் சிறுவர்கள் இருவர் காப்பாற்றப்பட்ட நிலையில் 7 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சிறுவனின் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.