பேருந்தின் சில்லில் சிக்கி சிறுவன் பலி; நிகழ்வொன்றுக்கு சென்றபோது விபரீதம்
பாணந்துறை ருக்கஹ பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியில் இருந்து தூக்கி வீசப்பட்ட மூன்று வயது சிறுவன், பாணந்துறை குருச சந்தியில் இருந்து ருக்கஹ நோக்கி பயணித்த பேருந்தின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளான்.
இத்துயர சம்ப்வம் நேற்று (30) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பாணந்துறை, அருக்கொட, பொன்சேகா மாவத்தையைச் சேர்ந்த நெதுச தத்சர பெர்னாண்டோ என்ற மூன்று வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
தூக்கி வீசப்பட்ட சிறுவன்
உயிரிழந்த சிறுவனின் சித்தியின் மகளுக்கு காது குத்தும் நிகழ்விற்காக மாலமுல்ல பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்றிருந்தனர். முச்சக்கர வண்டியில் சிறுவன், ஒரு பெண் குழந்தை மற்றும் 10 வயது சிறுவன் ஆகியோர் பயணித்துள்ளனர்.
இதன்போது பயணிகள் இறங்குவதற்காக பாணந்துறையின் ருக்கஹ பகுதியில் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு லொறி பேருந்தை முந்திச் செல்ல முயன்றுள்ளது.
அந்த நேரத்தில், பேருந்தின் முன்னால் வந்த முச்சக்கர வண்டி பிரேக்கை இயக்கியதால், முச்சக்கர வண்டியில் இருந்த சிறுவன் அதிலிருந்து தூக்கி வீசப்பட்டு பேருந்தின் அடியில் சிக்கியுள்ளான்.
இதனை அறியாத பேருந்தின் சாரதி பேருந்தை முன்னோக்கி செலுத்தியுள்ளார். இதன்போது, பேருந்தின் சில்லில் சிக்கி சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.