சாரதியின் அசமந்தம் ; பேருந்து சில்லில் சிக்குண்டு வாலிபர் உயிரிழப்பு
பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தின் சில்லில் சிக்குண்டு இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாகப் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் துயர சம்பவம் இன்று (20) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பொகவந்தலாவ பேருந்து நிலையத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணிக்கத் தயாராக இருந்த தனியார் பேருந்தை இயக்கச் செய்துவிட்டு, சாரதி கீழே இறங்கியுள்ளார்.

பேருந்தின் சாரதி பொலிஸாரினால் கைது
அப்போது பேருந்தின் தடையாளி சரியாக இயங்காததன் காரணமாக, பேருந்துக்கு முன்னால் நின்றுகொண்டிருந்த இளைஞன் மீது பேருந்தின் சக்கரம் ஏறி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் 27 வயதுடைய புஷ்பகுமார சிந்துஜன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் நோர்வூட், சென்ஜோன் டிலரி மேல்பிரிவு தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்றும், திருமணம் முடித்து வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் வசித்து வந்தவர் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குழாய் நீர் அகழும் வேலைத்திட்டத்திற்காகத் தன் குழுவினருடன் வவுனியாவிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு அவர் வருகை தந்திருந்தபோதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி பொகவந்தலாவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.