முல்லைத்தீவில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன்களுடன் பிடிப்பட்ட படகு!
முல்லைத்தீவு கடற்பகுதியில் தடைசெய்யப்பட்ட தொழில் உபகரணங்களை பயன்படுத்தி பெருமளவான மீன்களை பிடித்துக்கொண்டு சென்ற படகு ஒன்றினை மீனவர்கள் பிடித்து கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி தொழில்கள் அதிகரித்துள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்துமாறு தொடர்ச்சியாக மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இருந்தபோதும் கடற்படை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெறுவதால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மக்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக மீனவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கின்ற நிலைமையில் இன்று (06) சட்டவிரோத முறையிலே கொக்கிளாய் பகுதியில் இருந்து மாத்தளன் பகுதிக்கு சென்று சட்டவிரோத மீன்பிடி ஊடாக அதிகளவான மீன்களைப் பிடித்துக் கொண்டு மீண்டும் கொக்குளாய் திரும்பிய வழியிலே குறித்த படகை முல்லைத்தீவு மீனவர்கள் பிடித்து கொண்டு வந்து கடற்றொழில் நீரியல் வளத்தினைகளத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
சுமார் 700 கிலோ வரையான சூடை மீன்கள் படகில் கணப்பட்டுள்ளதுடன் சட்டவிரோதமான முறையில் இந்த மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதுடன் அத்துடன் ஒளிபாச்சிகள்(லைட்), பற்றிகள், என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது கொக்கிளாய் பகுதியினை சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.