சிஐடிக்குள் இஷாரா செவ்வந்திக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் ; பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிரடி
பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக பொலிஸார் கடும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட ரீதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

விசாரணைகள்
அங்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் அரச அதிகாரிகளாவர் என்றும், அவர்கள் குற்றவாளிகளுடன் எவ்வித தொடர்புகளையும் பேண முடியாது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர் இதன்போது வலியுறுத்தினார்.
பொலிஸ் அதிகாரிகள் தமது கடமைகளைச் செய்யும்போது தமது பொறுப்புகளை பேண வேண்டும் என்றும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.