அனர்த்தங்களால் அநாதரவான குழந்தைகளை வைத்து அரங்கேறும் மோசடி
அனர்த்தங்கள் காரணமாக 73 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சிறுவர்கள் தாய், தந்தை அல்லது பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடி செயல்
அவர்களில் பெரும்பாலானோர் பதுளை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும், அந்த மாவட்டத்தில் இவ்வாறான 21 சிறுவர்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தில் 20 சிறுவர்கள் தாய், தந்தை அல்லது பெற்றோரை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பதுளை மாவட்டத்தில் 35 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அனர்த்தம் காரணமாக, பெற்றோரை இழந்து பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் தகவல்களை திரட்டி மேற்கொள்ளப்படும் கடத்தல் சம்பவங்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சமூக ஊடகங்கள் வழியாக தொலைபேசி இலக்கங்களை பதிவிட்டு சிறுவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டி மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான மோசடியுடன் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிரான சட்டநடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.