அம்மா நான் சிப்ஸ் பாக்கெட் திருடவில்லை ; மனமுடைந்து சிறுவன் தற்கொலை
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் பன்ஸ்குரா பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு மாணவர், அம்மா நான் சிப்ஸ் பாக்கெட்டை திருடவில்லை என்று எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பகுல்தா உயர்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்புப் படித்து வந்த கிருஷ்னெண்டு (13), அங்கிருந்த ஒரு இனிப்பகத்தில் மூன்று சிப்ஸ் பாக்கெட்டுகளை திருடியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அம்மா நான் திருடவில்லை
கடையில் ஆள் இல்லாதபோது சிப்ஸ் பாக்கெட்டுகளை சிறுவன் திருடிச் சென்றதாக, கடையின் உரிமையாளர் சிறுவனைப் பிடித்து வந்து ரூ.20 பெற்றுக் கொண்டுள்ளார்.
அதோடு மக்கள் முன்னிலையில் சிப்ஸ் பாக்கெட் திருட மாட்டேன் என்று கூறி மன்னிப்புக் கேட்குமாறு வலியுறுத்தியிருக்கிறார். கடையிலிருந்து சிறுவனை அழைத்துச் சென்ற தாய், வீட்டுக்குச் சென்று கடுமையாக திட்டியிருக்கிறார்.
இதையடுத்து வீட்டில் ஆள் இல்லாதபோது கிருஷ்ணென்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடைக்காரர், சிறுவனை திருடன் என்று குற்றம்சாட்டியதே தற்கொலைக்குக் காரணம் என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரிடம் குடும்பத்தினர் புகார் எதுவும் கொடுக்காத நிலையில், கடைக்காரர் தலைமறைவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்கொலை செய்துகொண்ட சிறுவன், கடைசியாக எழுதியக் கடிதத்தில், அம்மா நான் சிப்ஸ் பாக்கெட்டுகளை திருடவில்லை என்று எழுதியிருப்பது, பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.