தாயாரை பார்க்க சென்ற போது ஏற்பட்ட அசம்பாவிதம்... பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்!
மட்டக்களப்பு - காத்தான்குடியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் மதிலில் மோதி விபத்துக்குள்ளானதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்றையதினம் (19-06-2024) மாலை காத்தான்குடி பொலிஸ் பிரிவு டீன் வீதி ஏ.எல் எஸ். மாவத்தை வீதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தாயாரைப் பார்ப்பதற்காக அப்றார் நகர், 4ம் குறுக்கு வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் காணப்பட்ட வீடொன்றின் மதிலில் மோதியமையால் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் 05 பிள்ளைகளின் தந்தையான 43 வயதான நபரே உயிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.