பசில் ராஜபக்ஷவை காப்பாற்ற துணைப்போகும் முக்கிய அரசியல்வாதிகள்!
இலங்கையில் 21வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்து பொதுஜன பெரமுன கட்சி விலகி இருக்க தயாராகி வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இரட்டைக் குடியுரிமை காரணமாக பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்காமல் தடுப்பதும் இதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
20வது திருத்தத்தை இரத்து செய்து, அதன் நேர்மறையான கூறுகளுடன் கூடிய பல சீர்திருத்தங்களை உள்ளடக்கிய அரசியலமைப்பின் 21வது திருத்தம் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நிலைமைக்கு மத்தியில் நாட்டைக் காப்பாற்ற தேவையான சமூக சீர்திருத்தங்களை அரசியலமைப்புச் சட்டமாக்க தேவையான அணுகலைப் பெறும் நம்பிக்கையில் செய்யப்படும் இந்தத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு அதனை நிறைவேற்றாமல் போனால் அது நாட்டுக்கே பேரழிவாக அமையும் என சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது குறித்து பொதுஜன பெரமுன கட்சியின் சேர்ந்த சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவரிடம் வினவியபோது
இது தொடர்பில் உறுதியான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் கட்சிக்குள் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலையில் நிறைவேற்று அதிகாரத்தை அதிகரிக்குமே தவிர அதனை கலைக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டில் பொதுஜன பெரமுன கட்சி இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.