யாழில் பெண்கள் சிலரின் மோசமான செயல்; பிறந்த நாளில் இளைஞர் விபரீத முடிவு!
நாவாந்துறை, கண்ணாபுரம் பகுதியில் புறா வளர்க்கும் இளைஞர்களிற்கிடையிலான உரசல், விபரீதத்தில் முடிந்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் நாவாந்துறை, கண்ணாபுரம் பகுதியில் 20 வயதான புவனேந்திரராசா சுகந்தன் என்ற இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் பெண்கள் என்ற பெயரில் பேயாட்டம் ஆடியவர்களால் ஒரு உயிர் பறிபோயுள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
நாவாந்துறைப் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் புறா வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அதில் ஒருவரின் புறாவை இன்னுமோர் இளைஞன் தனது புறாக்களை கொண்டு இறக்கியுள்ளார். புறாவுக்கு சொந்தக்காரரான இளைஞன் புறாவினை திருப்பி கேட்ட போது , தர்க்கம் ஏற்பட்டு கை கலப்பாக மாறியுள்ளது.
அதில் புறாவுக்கு சொந்தக்காரரான இளைஞன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அதனை அடுத்து தனது சக நண்பர்களிடம் விபரத்தை கூறிய போது , அவர்கள் நால்வர் இணைந்து தமது நண்பனை தாக்கியவரை மீள தாக்கியுள்ளனர். ஒரே பகுதியை சேர்ந்த இளையோர் இவ்வாறு மோதிக்கொள்வது , ஊருக்குள் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து விடும் என கருதிய சிலர் , அந்த நால்வரையும் , அவர்கள் தாக்கிய இளைஞனிடம் மன்னிப்பு கோருமாறு கூறியுள்ளனர்.
அதனால் குறித்த நால்வரும் தாம் தாக்கிய இளைஞனிடம் மன்னிப்பு கோர அவரது வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு அந்த இளைஞனின் உறவினர்கள் உள்ளிட்ட பெண்கள் குழுவொன்று நான்கு இளைஞர்கள் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தி , மிளகாய் தூளை முகத்திற்கு பூசி , சித்திரவதைகள் புரிந்து , அதனை வீடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றியுள்ளனர்.
இச்சம்பவங்கள் நடந்து சுமார் இரண்டு கிழமைகளின் பின்னர் பெண்கள் குழுவின் சித்திரவதைக்கு உள்ளான இளைஞன், கடந்த 26ஆம் திகதி தனது பிறந்தநாள் அன்று நண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில் சித்திரவதை புரிந்த பெண்கள் சிலர் “எங்களிடம் அடி வாங்கிட்டு , பிறந்தநாள் கொண்டாட வெக்கம் இல்லையா ?” என கேட்டுள்ளனர். இதனால் , நண்பர்கள் , உறவினர்களின் கிண்டல் , கேலிக்குகளுக்கு உள்ளாகி மனமுடைந்திருந்த இளைஞன் , அதனை தாங்காது தனது பிறந்தநாளன்று தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பெண்கள் மீது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை உயிரிழந்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இளைஞனின் சடலம் கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் குறித்த இளைஞரின் உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
https://jvpnews.com/article/young-man-commits-suicide-in-jaffna-1627489515