அவிசாவளை துப்பாக்கிச்சூடு சம்பவம்: வெளியான பின்னணி தகவல்
அவிசாவளை - தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.
இச்சசம்பவத்தினை தற்போது துபாயில் தங்கியுள்ள 'மன்னா ரமேஷ்' என்ற குற்றவாளி இயக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
அவிசாவளை, தல்துவ, குருபாஸ்கொட வளைவுக்கு அருகில் நேற்று (20) இரவு 11.15 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டியில் இறுதிச் சடங்கிற்குச் சென்ற குழுவினரே இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் டி-56 ரக துப்பாக்கியால் துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கானவர்கள்
அவர்கள் மீது சுமார் 25 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இஷங்க சாமிக்க என்ற 27 வயதுடைய நபரும், 'புத்தா' என அழைக்கப்படும் தனுஷ்க பிரேமலால் என்ற 38 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், அவந்த இரோஷன என்பவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
அவரது காலில் ஐந்து முறை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த மற்ற நபரின் வாயில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள நிலையில் அவரின் பல பற்கள் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னா ரமேஷின் தரப்பினர் இதற்கு முன்னரும் துப்பாக்கிச்சூட்டில் காலில் காயம் அடைந்த அவன்தா இரோஷன மீது துப்பாக்கிச் சூடு நடத்திய போதும் காயத்துடன் அவர் உயிர் பிழைத்திருந்தார்.
காயமடைந்த நபர், மன்னா ரமேஷின் சகோதரரை தாக்கிய சம்பவத்திற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.