இலங்கையில் புதைக்கபட்ட குழந்தையின் சடலத்திற்கு நடத்தப்பட்ட செயலால் சந்தேகத்தில் பொலிஸார்
தனது தந்தையின் கல்லறையைச் சுத்தம் செய்வதாகக் கூறி மயானத்திற்குள் நுழைந்து, புதைக்கப்பட்டிருந்த மூன்று மாதக் குழந்தையின் சடலத்தைத் தோண்டிய எடுத்த நபரைத் தேடி ஹோமாகம தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹோமாகம, நியதகல பொது மயானத்திற்கு நேற்று (11) மாலை வந்த சந்தேக நபர் அங்கிருந்த மின்மயானக் காப்பாளரைச் சந்தித்து தனது தந்தையின் கல்லறையைச் சுத்தம் செய்யப் போவதாகக் கூறி மயானத்திற்குள் செல்ல அனுமதி பெற்றுள்ளார்.

சந்தேகத்தில் பொலிஸார்
எனினும், நீண்ட நேரமாகியும் அந்த நபர் மயானத்தை விட்டு வெளியேறாததால் சந்தேகமடைந்த காப்பாளர், உள்ளே சென்று பார்த்தபோது அப்போது அங்கிருந்த ஒரு கல்லறை தோண்டப்பட்டு, சடலத்தை வெளியே எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதை அவர் அவதானித்துள்ளார்.
இதனையடுத்து அவர் உடனடியாக ஹோமாகம பிரதேச சபை அதிகாரிகளுக்கும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளார். சோதனையின் போது சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட மூன்று மாதக் குழந்தையின் கல்லறையே இவ்வாறு தோண்டப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
குறித்த கல்லறை தோண்டப்பட்டதற்கான காரணம் இது வரை தெரியவராத நிலையில் சந்தேகத்தின் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தப்பியோடிய சந்தேக நபரைக் கைது செய்ய ஹோமாகம பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.