அறையில் இரத்தக்கறைகள்: ஷேன் வோர்னின் இறுதி நிமிடங்கள் பற்றிய வெளியான தகவல்!
தாய்லாந்தில் மாரடைப்பால் மரணம் அடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வோர்ன் (Shane Warne) பிரேத பரிசோதனை நடந்து வரும் நிலையில், அவர் இறப்பதற்கு முன்பு அறையில் சந்தித்த போராட்டங்கள் குறித்து தாய்லாந்து பொலிஸார் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரரான ஷேன் வோர்ன், தாய்லாந்துக்கு மூன்று மாத ஓய்வுக்காகச் சென்ற நிலையில் திடீர் மரணமடைந்த செய்தி, விளையாட்டு உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தனது வில்லா இல்லத்தில் தங்கியிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தகவல் வெளியானது.
தாய்லாந்தின் கோஹ் சாமுய் (Koh Samui) பகுதியில் ஷேன் வார்னுக்கு வில்லா ஒன்றுள்ளது. இங்கு தனது மூன்று நண்பர்களுடன் விடுமுறையை கழிப்பதற்காக நேற்று முன்தினம் (04-03-2022) இரவு வந்துள்ளார்.
வோர்னின் நெருங்கிய நண்பராகவும், உதவியாளராகவும் அறியப்படும் ஆண்ட்ரூ நியோபிடோவ் (Andrew Neophitou) என்பவர்தான் கடைசி நிமிடங்களில் அவருக்கு முதலுதவி செய்துள்ளார்.
இருப்பினும், அவரின் முயற்சிகள் அனைத்தும் வீணாகின. தற்போது தாய்லாந்து வைத்தியசாலையில் ஷேன் வோர்னின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, தாய்லாந்து பொலிஸார் ஷேன் வோர்னின் இறப்பு நிகழ்ந்த அவரின் வில்லாவை சோதனையிட்ட பின்பு விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் முடிவில், தாய்லாந்து பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலில்,
“எங்கள் சோதனையின் போது வோர்னின் அறையின் தரை விரிப்பிலும், 3 குளியல் துண்டுகள் மற்றும் தலையணையிலும் இரத்தக்கறைகள் காணப்பட்டது. அதற்கு அவரது நண்பர்கள் சிபிஆர் சிகிச்சை அளித்தபோது வோர்னுக்கு இருமல் மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.
ஷேன் வோர்னை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பு அவரின் நண்பர் ஆண்ட்ரூ சிபிஆர் சிகிச்சை அளித்துள்ளார். வாய் வழியான சுவாச முயற்சி அது. 20 நிமிடங்கள் வரை அளித்த சிகிச்சை பலனளிக்கவில்லை.
ஷேன் வோர்னின் அறையில் வாந்தி இருந்தது. ஆனால் உடம்பில் காயங்கள் எதுவும் இல்லை. எங்கள் விசாரணையின் அடிப்படையில் சம்பவ இடத்தில் எந்த தவறும் இல்லை என்றே தோன்றுகிறது.
அவருக்கு ஆஸ்துமா மற்றும் இதயப் பிரச்சனைகள் இருந்துள்ளதும் எங்களுக்கு சொல்லப்பட்டுள்ளது. ஷேன் வோர்ன் போதைப்பொருள் உபயோகித்த தடயங்களும் இல்லை” என்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, ஷேன் வார்னின் கடைசி நிமிடங்கள் குறித்து அவரின் மேலாளர் ஜேம்ஸ், ஊடகங்களிடம் பேசியுள்ளார். அதில், “ஷேன் வோர்ன் மூன்று மாத ஓய்வு எடுக்க திட்டமிருந்தார். அதன் தொடக்கம்தான் இது. தாய்லாந்து நேற்று முன்தினம் இரவுதான் வந்திருந்தார்.
மாலை 5 மணிக்கு மது அருந்தச் செல்வது அவர்கள் வழக்கம். ஷேன் வோர்ன், எப்போதும் நேர மேலாண்மையைக் கடைபிடிப்பவர். மற்றவர்களை எப்போதும் ‘வா, லேட் ஆகப் போகிறது’ என்று அவரே துரிதப்படுத்தப்படுத்துவார்.
ஆனால், நேரம் ஆகியும் ஷேன் வோர்ன் வரவில்லை. ஏதோ தவறாக நடக்கிறது என்பதை உணர்ந்த நண்பர்கள் 5.15 மணிக்கு ஷேன் வோர்ன் அறையின் கதவை தட்டியுள்ளனர். அங்கே உணர்வில்லாமல் இருந்த அவருக்கு நண்பர் ஒருவர் சிபிஆர் முதலுதவி செய்தார்.
ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமாகலாம் என்பதால் அவர்களே முதலுதவி செய்தனர். ஆம்புலன்ஸ் வந்தபின், அவர்களும் ஷேன் வோர்னுக்கு 10 – 20 நிமிடங்கள் சிபிஆர் முதலுதவி சிகிச்சை செய்தனர்.
வைத்தியசாலைக்கு கொண்டுசென்றும் அவரின் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்யப்பட்டது. ஆனால் பலனில்லை. ஷேன் வோர்ன் உயிரிழந்ததை வைத்தியர்கள் உறுதி செய்தனர்” என்று விவரித்துள்ளார்.