யாழ். மக்களே அவதானம்: சிக்கிய மனிதப் பாவனைக்கு உதவாத பழப் புளி!
யாழில் நகர்ப் பகுதியில் மனிதப் பாவனைக்கு பயன்படுத்தப்பட்டாத பெருந்தொகையான பழப்புளியை விற்பனைக்கு தயார்செய்து கொண்டிருந்த போது பொதுச்சுகாதார பரிசோதகரால் கையும் மெய்யுமாக பிடிபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த களஞ்சியம் இன்று (25-10-2022) மாலை பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவினரால் முற்றுகையிடப்பட்டது.
யாழ் நகர பொதுச்சுகாதார பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய யாழ் மாநகர பொதுச்சுகாதார பிரிவினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள களஞ்சியம் ஒன்றில் 6000 கிலோகிராம் வரையான மனிதப் பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை அருவருக்கதக்கவகையில் சுகாதாரமின்றி பொதியிட்டுக் கொண்டிருந்தநிலையில், பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவினரால் முற்றுகையிடப்பட்டது.
மனிதப் பாவனைக்கு உதவாத நிலையில் 6000 கிலோகிராம் வரையிலான பழப்புளி கைப்பற்றப்பட்டதுடன் உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.