ஓமந்தையில் தனியார் காணியில் விகாரை அமைக்க முயற்சி; பொலிஸார் அடாவடி
வவுனியா- ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியினை பொலிசார் அபகரித்து விகாரை அமைப்பதற்கு முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏ9 வீதில் ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை நேற்றைய தினம் (30) துப்புரவு செய்த ஓமந்தை பொலிசார், குறித்த இடத்தில் விகாரை ஒன்றினை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
காணிக்கு சொந்தம் கோரும் நபர்
குறித்த காணி நீண்ட காலமாக ஒருவரின் பராமரிப்பில் இருந்த போதிலும், அவருக்கான காணி ஆவணங்கள் இல்லாத நிலையில் தற்போதும் அது அரச காணியாக காணப்பட்டு வருகின்றது.
எனினும் குறித்த காணிக்கு சொந்தம் கோரும் நபர் இக் காணி தனக்குரியதானது என பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட அரச அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதுவரை அவருக்கு காணிக்கான ஆவணங்கள் கொடுக்கப்படாத நிலையிலேயே விகாரை அமைக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொலிஸார் காணி உரிமையாளரை அச்சுறுத்தி துப்புரவு செய்ததாகவும் தெரியவருகின்றது.
இது தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேணடும் என பாதிக்கப்பட்டவர் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.