இலங்கை மீனவர்கள் மீது தாக்குதல்; இந்தியா மறுப்பு
2026 ஜனவரி 29 ஆம் திகதி இலங்கை மீனவர்கள் கடலில் தாக்கப்பட்டதாக வெளியான செய்திகளை இந்தியா மறிஊத்துள்ளது.
இந்திய பிரஜைகளால் கடலில் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊடகங்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்திய உயர் ஸ்தானிகராலய ஊடகப் பேச்சாளர் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார் .

எந்தவிதமான தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2026 ஜனவரி 29 ஆம் திகதி இலங்கை மீனவர்கள் கடலில் தாக்கப்பட்டதாக வெளியான செய்திகளை நாம் அறிந்துள்ளோம்.
எமது தரப்பில், இந்திய கடற்படையினராலோ அல்லது இந்திய கரையோரக் காவல் படையினராலோ அவ்வாறான எந்தவிதமான தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை நாம் மிகவும் உறுதியாகக் கூறுகின்றோம்.
மீனவர்களின் வாழ்வாதார ரீதியான விடயங்கள் தொடர்பாக மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டுமெனவும், எந்தச் சந்தர்ப்பத்திலும் பலத்தை பயன்படுத்தக் கூடாதெனவும் இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.
இவ்வாறான விவகாரங்கள் குறித்து நாம் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பினைப் பேணிவருகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.