அதுருகிரிய துப்பாக்கிச்சூடு: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் உட்பட 07 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யபட்ட சந்தேகநபர்களை பொலிஸார் இன்றையதினம் மாலை கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுருகிரியவில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றில் கடந்த 08ஆம் திகதி அன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த என்றழைக்கப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தின் போது, பிரபல பாடகர் கே. சுஜீவவின் கணவரான நயன வசுலாவும் உயிரிழந்துள்ளதுடன், கே.சுஜீவா, கிளப் வசந்தவின் மனைவி, மற்றுமொரு பெண்ணும் ஆணும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.