ஓரியன் விண்கலத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பதற்றம்!
நாசாவின் கட்டுப்பாட்டு மையத்துடனான ஓரியன் விண்கலத்தின் தொடர்பு இன்று அதிகாலை சுமார் 42 நிமிஷங்கள் துண்டிக்கப்பட்டதால் அனைவரும் பதற்றமடைந்தனர். இன்று அதிகாலை 4.13 மணியளவில் நிலவுக்கு மிக நெருக்கமாக அதன் பின்புறத்தில் விண்கலம் பயணித்தபோது, நாசாவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
நாசா விஞ்ஞானிகள் அனைவரும் பதற்றமடைந்த நிலையில், ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்வெளி வீரர்களுடனான தொடர்பை மீண்டும் ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர்.

ஏப்ரல் 11ஆம் திகதி பசிபிக் கடலை வந்துசேரும்
இந்த நிலையில், மீண்டும் விண்கலத்துடனான தொடர்பு அதிகாலை 4.55 மணியளவில் கிடைத்துள்ளது. இடைப்பட்ட நேரமான அதிகாலை 4.35 மணியளவில்தான் இதுவரை இல்லாத மிக அதிக தொலைவான 4,06,771 கி.மீ. பதிவாகியுள்ளது.
இதனிடையே, நிலவுக்கு மிக அருகில் பறந்து கொண்டிருக்கும் விண்வெளி வீரர்களுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கலந்துரையாடி, அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
ஓரியன் விண்கலம் மீண்டும் நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியை நோக்கித் தள்ளப்பட்டு, ஏப்ரல் 11ஆம் திகதி பசிபிக் கடலை வந்துசேரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு, நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டத்தின் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்வெளி வீரர்கள், பூமியிலிருந்து அதிக தொலைவு சென்று சாதனை படைத்துள்ளனர்.