பாடசாலையில் உளவியல் நிகழ்ச்சி நடத்த சென்றவர்கள் கைது; காரணம் இதுதான்
பதுளை - ஹாலிஎல பிரதேசத்திலுள்ள பாடசாலை யொன்றில் மாணவர்களுக்கான உளவியல் கருத்தரங்கை நடத்தச் சென்றிருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உளவியல் நிகழ்ச்சி நடத்தச்சென்ற ஆலோசகர் மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் மூவர், துப்பாக்கி மற்றும் 129 தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கறுப்பு நிற ஆடை அணிந்திருந்த அவர்கள் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக ஹாலிஎல பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவொன்று அப்பாடசாலைக்கு விஜயம் செய்து விசாரணைகளை மேற்கொண்டதில், குறித்த வேலைத்திட்டத்துக்கு, மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல்லது வலயக் கல்விப் பணிப்பாளரின் அனுமதி பெறப்படவில்லையெனத் தெரியவந்துள்ளது.
அதேவேளை பாடசாலைக்கு ஆலோசகராக வந்திருந்த நபர், எந்த வொரு நிறுவனத்தின் கீழும், இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த பதிவுகளை மேற்கொண்டிராத, துறைசார் தகை மைகள் அற்றவர் என்பதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்தே குறித்த நபர்கள் கைதான நிலையில் , சந்தேகநபர்கள் 36, 24, 23 மற்றும் 30 வயதுடைய சிலாபம், இரத்மலானை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.