இலங்கையில் மீண்டும் ஒரு கோரவிபத்து; இருவர் பலி 26 பேர் படுகாயம்
நோட்டன் பிரிட்ஜ் – கினிகத்தேனை தியகல பிரதான வீதியில் டெப்லோ பகுதியில் தனியார் பேரூந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று இரவு 9.30 மணியளவில் நல்லதண்ணியிலிருந்து கினிகத்தேனை தியகல வழியாக கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேரூந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து
கொழும்பு-ரத்மலானை பகுதியிலிருந்து சிவனொளிபாதமலைக்கு சென்று, மீண்டும் கொழும்பு நோக்கி செல்லும் வழியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது பேரூந்தானது சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பேரூந்து எதிரே வந்த வாகனம் ஒன்றிற்கு இடமளிக்கும் போதே இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்து தொடர்பில் நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.