இலங்கை மக்களுக்கு மற்றுமொரு சிக்கல்!
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக அவசர நிலையில் நோயாளர்களை அழைத்துச் செல்ல வருகையில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதம் ஏற்படக்கூடும் என்று சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை (Suwa seriya Ambulance) அறிவித்துள்ளது.
- ஏற்கனவே நாளாந்தம் சுமார் 1000 நோயாளர் இடமாற்றங்களை வழங்கிவந்த சேவை தற்போது 1600 வரை அதிகரித்துள்ளது.
- இந்நிலையில் அதிகரித்த தேவையை தற்போதைய டீசல் நெருக்கடியுடன் தற்போதிருக்கும் அம்புலன்ஸ்கள் மூலமே நிர்வகிக்க வேண்டியுள்ளது.
- எரிபொருள் பற்றாக்குறையால் சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை ஊழியர்கள் பணி நிலையங்களுக்கு வருவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த மூன்று சிக்கல்களினால் குறித்த கால தாமதம் ஏற்பட நேரிடலாம் என்று குறித்த சேவை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் தங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட தாமதங்கள் அல்லது அசௌகரியங்கள் ஏற்பட்டால் அவற்றைப் பொறுத்துக் கொள்ளுமாறு குறித்த சேவை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நெருக்கடியான காலத்திலும் பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்க அனைத்து முயற்சிகளையும் செய்வதாகவும் சுவசெரிய ஆம்புலன்ஸ் சேவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.