நாட்டில் மேலும் 20 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படுகிறதா?
நாட்டில் தற்போது நிலவும் அசாதாரணமான நிலை காரணமாக சுமார் 20 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யூ.எஸ்.எஸ் பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாடு மிகவும் கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளதாகவும் இதனால் விநியோகஸ்தர்கள் பாரிய பிரச்சினையை எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை, மரதன்கடவல, கெக்கிராவ, கதிரான மற்றும் அக்குரஸ்ஸ ஆகிய ஐந்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் 24 மணி நேரமும் முழுமையான பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கோரப்பட்டுள்ளதாகவும், எனினும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இதுவரையில் அந்த பாதுகாப்பைப் பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.