நாட்டு மக்களுக்கு பொலிஸ் அத்தியட்சகர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
நாட்டில் விடுமுறை தினங்களில் பொதுமக்கள் பல பகுதிகளில் ஒன்று கூடும் நிகழ்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
எதிர்வரும் வாரங்களில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதால் இவ்வாறான விடயங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகளை கண்காணிப்பதற்காக மேல் மாகாண எல்லைகள் 13 இல் 115 பொலிஸ் உத்தியோகத்தர்களும், 81 இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
அதற்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை (17) மேல் மாகாணத்திலிருந்து வெளியேற முற்பட்ட 976 வாகனங்களும், 1439 பேரும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இதேபோன்று மேல் மாகாணத்திற்குள் நுழைய முற்பட்ட 931 வாகனங்களும், 1710 நபர்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர்.
இதன்போது உரிய அனுமதி இன்றி பயணிக்க முற்பட்ட 415 நபர்களும், 208 வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் எதிர்வரும் வாரங்கள் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான தயார்படுத்தல்கள் இடம்பெறும் வாரங்கள் ஆகும்.
எனவே தற்போதைய விடுமுறை காலத்தில் பிள்ளைகள் மற்றும் குடும்பத்துடன் போக்குவரத்துக்களை மேற்கொண்டால் பாடசாலைகளை ஆரம்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே விடுமுறை நாட்களில் எங்கும் செல்லாது வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.