மாணவர்களுக்கான பாடப்புத்தகம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு
பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும், அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் சில வகுப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
இதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமுலுக்கு வரும் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் வராத 2 முதல் 5 மற்றும் 7 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழக்கம்போல் வழங்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி சீர்திருத்தங்கள்
அத்துடன் கல்வி சீர்திருத்தங்களின் அடிப்படையில் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது. அதற்கு பதிலாக எளிமைப்படுத்தப்பட்ட கற்றல் கையேடுகள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் ஆசிரியர்களுக்கான கற்றல் கையேடுகள் அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும், புதிய கல்விச் சீர்திருத்தங்களின் தேவைகளுக்கு ஏற்ப அவை அச்சிடப்படும் என்றும் நாலக களுவெவ தெளிவுபடுத்தினார்.
அத்துடன் 2 முதல் 5, 7 முதல் 11 ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களும், 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கான கற்றல் கையேடுகளும் தற்போது அச்சிடப்பட்டு வருகின்றன. இவை நவம்பர் 15க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கமைய நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு விநியோகிக்கும் பணி டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.