கொழும்பு தேசிய வைத்தியசாலை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
நாட்டில் நிலவும் கொவிட் -19 தொற்று சூழலை கருத்திற்கொண்டு , கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் இதய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை வைத்தியசாலையின் பணிப்பாளரான வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசரமான இதய அறுவை சிகிச்சைகளே மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் 6,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் இதய அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை வைத்தியசாலையின் சிரேஷ்ட செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, நிலவும் சூழ்நிலையில் இருதய அறுவை சிகிச்சை செய்வதில் கடுமையான தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொவிட் -19 தொற்றுநோய்க்கு முன்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வாரந்தம் சுமார் 25 இதய அறுவை சிகிச்சைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது அந்நிலை மாறியுள்ளதுடன், இதய அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை வாரத்திற்கு ஐந்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலை தொடருமாயின் , இந்தாண்டு நோயாளி ஒருவர் இதய அறுவை சிகிச்சைக்கான காத்திருப்பு பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டால், நோயாளி 2023 க்கு பின்னரே அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியும் எனவும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.